நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் க்ரெகர், 31, மீது அவரது 6 வயது மகன் கோரி மிக்கியோலோவின் மரணத்தின் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோரி, 2021ஆம் ஆண்டு உயிரிழந்தான். அவனை அவனது தந்தையே கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கிறிஸ்டோபர் அவரது மகனைத் துன்புறுத்துவதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரவிவருகிறது.
குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கிறிஸ்டோபர் க்ரெகர், தமது மகன் பருமனாக இருப்பதாகக் கூறி, அவனை உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள ‘ட்ரெட்மில்’ இயந்திரத்தில் ஓட வைத்திருக்கிறார்.
தற்போது பரவிவரும் அந்தக் காணொளியில், தொடர்ந்து ஓடும் அந்தச் சிறுவன் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் கீழே விழுவதைக் காணமுடிகிறது. அவனைத் தூக்கி வலுக்கட்டாயமாக மீண்டும் அவனது தந்தை ஓட வைக்க முயற்சிப்பதையும், தொடர்ந்து மகன் கீழே விழ, அவனைத் தூக்கி, அவன் தலையைக் கடித்து அந்த தந்தை மீண்டும் ஓட வைப்பதையும் காணொளியில் காணமுடிகிறது.
இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுவனுக்கு மூச்சு விடுவதில் சிரமமும், வாந்தி மயக்கமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். பின்னர் அவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.