மணிலா: பிலிப்பீன்ஸ் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து மே 6ஆம் தேதியன்று ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.
பிலிப்பீன்ஸ் மீது எதிரிப் படைகள் படையெடுத்தால் அவற்றை எதிர்கொள்ளப் பயிற்சி செய்யும் வகையில் பாவனைப் பயிற்சி நடத்தப்பட்டது.
இந்தக் குறிப்பிட்ட பயிற்சியில் ஏறத்தாழ 200 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
பிலிப்பீன்சின் வடக்குக் கடற்பகுதியில் இப்பயிற்சி நடைபெற்றது.
இந்தக் கடற்பகுதி தைவானை நோக்கி உள்ளது.
பாவனைப் பயிற்சியின்போது பிலிப்பீன்ஸ் மற்றும் அமெரிக்கப் படைகள் கடலை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சின.
அத்துடன், பீரங்கிப் படைகளும் பயிற்சியில் ஈடுபட்டன.
ஆண்டுதோறும் நடைபெறும் இப்பயிற்சிகள் இம்முறை ஏப்ரல் மாதம் தொடங்கின.
மே 10ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சிகளில் பிலிப்பீன்ஸ் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் எனக் கிட்டத்தட்ட 16,000 பேர் பங்கேற்கின்றனர்.
தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சையில் பிலிப்பீன்சுக்கும் சீனாவுக்கும் இடையிலான கருத்துப் பிணக்கம் மோசமடைந்து வரும் நிலையில் இந்த ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.