காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 315ஆக அதிகரித்திருப்பதாகவும் 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் ஆட்சியாளர்களின் அகதிகளுக்கான அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (மே 12) தெரிவித்தது.
கனமழை காரணமாக மே 10 ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 153 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை (மே 12) அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியது. அந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அது முன்னுரைத்தது.
வடக்கு பாக்லான் மாநிலத்தில் இருக்கும் அதன் மாநில அலுவலகம் அளித்த புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக ஊடகத்தில் அகதிகள் அமைச்சு பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் கால்நடைகள் அழிந்துவிட்டதாகவும் அது தெரிவித்தது. மேலும், வெள்ளத்தால் சுகாதார வசதிகள், தண்ணீர் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டில் செயல்படும் மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் கூறியது.