தானா டத்தார்: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ராவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் குறைந்தது 41 பேர் மாண்டனர். 17 பேரை இன்னும் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் மே 13ல் தெரிவித்தனர்.
மேற்கு சுமத்ராவின் மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாகத் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவை ஏற்பட்டதாக அந்த மாநிலத்தின் மீட்புத் துறைத் தலைவர் அப்துல் மாலிக் கூறினார்.
மழையின்போது அங்குள்ள மராப்பி எரிமலையின் சரிவுகளில் கற்களுடன் எரிமலைக் குழம்பும் வழிந்தோடியது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஏறத்தாழ 400 அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக திரு அப்துல் மாலிக் தெரிவித்தார்.
அவர்களில் உள்ளூர் மீட்புப்பணியாளர்கள், காவல்துறையினர், ராணுவ வீரர்கள் அடங்குவர்.
தேடுதல் பணியில் ஆளில்லா வானூர்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

