ராஃபா: இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ராஃபா நகரிலிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் கிட்டத்தட்ட 800,000 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் பிரிவுத் தலைவர் ஃபிலிப் லஸாரினி எக்ஸ் தளத்தில் மே 18ஆம் தேதியன்று பதிவிட்டார்.
“மே 6லிருந்து ராஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. உயிர் பிழைக்க இதுவரை கிட்டத்தட்ட 800,000 பேர் அல்லது ராஃபா நகர் மக்கள்தொகையில் 50 விழுக்காட்டினருக்கு அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
“ராஃபாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதை அடுத்து, அவர்கள் காஸாவின் மத்தியப் பகுதிகளுக்கும் கான் யூனிஸ் பகுதிக்கும் தப்பிச் சென்றுள்ளனர். அங்கு போர் காரணமாகச் சேதமடைந்த கட்டடங்களில் சிலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
“ஒவ்வொரு முறையும் காஸா மக்கள் தப்பிச் செல்லும்போது அவர்களிடம் இருக்கும் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. புதிய இடத்தை அடையும்போது அவர்கள் கையில் எதுவும் இல்லாமல் திரும்பவும் வாழ்க்கையைப் போராடித் தொடங்குகின்றனர்,” என்று திரு லஸாரினி தெரிவித்தார்.
ராஃபாவில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாகவும் அவர்களை வேரோடு அழிக்க அந்நகரில் நிலவழித் தாக்குதல் நடத்துவது அவசியம் என்றும் இஸ்ரேல் கூறி வருகிறது.