தோக்கியோ: ஜப்பானுக்கான சீனத் தூதர், தைவான் குறித்துக் கூறிய கருத்துக்கு தோக்கியோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தூதர் வூ ஜியாங்ஹாவின் கருத்துகள் ‘மிகவும் பொருத்தமற்றவை’ என்று ஜப்பானிய அமைச்சரவைத் தலைமைச் செயலாளர் யோஷிமாசா ஹயாஷி, புதன்கிழமை (மே 22) கூறினார்.
ஜப்பானிய மக்கள் தைவானின் சுதந்திரத்தை ஆதரித்துச் சீனாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கடந்த திங்கட்கிழமை சீனத் தூதர் கூறியிருந்தார்.
“தோக்கியோவில் தங்கிப் பணிபுரியும் தூதர் ஒருவர் இத்தகைய சொற்களைக் கூறுவது மிகவும் பொருத்தமற்ற செயல் என்று கருதுகிறோம். இதுகுறித்து உடனடியாக எங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளோம்,” என்று திரு ஹயாஷி கூறினார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் பேச்சாளருமான அவர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
தைவான் விவகாரத்திற்கு அமைதியான முறையில் கலந்துரையாடல் மூலம் தீர்வுகாண்பதையே ஜப்பான் எதிர்பார்க்கிறது என்று தோக்கியோவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

