தைப்பே: தைவானைச் சுற்றி இரண்டு நாள்களாக சீனா மேற்கொண்ட போர்ப்பயிற்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப் போர்ப்பயிற்சியில் குண்டுவீசித் தாக்கும் போர் விமானங்களுடன் வீரர்கள் கப்பலில் ஏறும் மாதிரிப் பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சீனப் போர்ப்பயிற்சியில் அதிகமான போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டதாக சனிக்கிழமை (மே 25) அன்று தைவான் கூறியது.
இதுபற்றி வெள்ளிக்கிழமை பின்னேரத்தில் கூறிய சீன அரசின் ராணுவ தொலைக்காட்சி ஒளிவழி, போர்ப்பயிற்சி முடிவுற்றதாக தெரிவித்தது.
போர்ப்பயிற்சி முன்பு அறிவித்ததுபோல் மே 23, 24 தேதிகளில் நடைபெற்றதாக சீன ராணுவத்தின் செய்தித்தாள் கூறியது.
‘ஜாய்ன்ட் சோர்ட்-2024ஏ’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் போர்ப்பயிற்சி புதிய தைவானிய அதிபர் லாய் சிங் டே பதவியேற்று மூன்று நாள்களுக்குப் பின் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
புதிய தைவானிய அதிபரை சீனா பிரிவினைவாதி என்றும் குறிப்பிட்டுள்ளது.
புதிய தைவானிய அதிபர் மே 24 தேதியன்று தனது பதவியேற்பு விழாவில் தைவானிய நீரிணையின் இரு வேறு பகுதிகளில் இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றுக்கு அடிபணிந்தவை அல்ல என்று கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலடியாக, சீனா தனது போர்ப்பயிற்சிக்கு ‘தண்டனைப் பயிற்சி’ என்று பெயரிட்டது.
இந்தப் பேச்சு சீனாவின் பார்வையில் இரு நாடுகளும் தனித்தனி நாடுகள் என தைவானிய அதிபர் கூறியதாக உள்ளது என செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
சீனாவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என திரு லாய் மீண்டும் மீண்டும் கூறியுள்ள நிலையில் சீனா அவருடைய அழைப்பை நிராகரித்துள்ளது.
சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், தைவானிய அதிபர், தமது நாட்டு மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.
சீனப் போர்ப்பயிற்சியைக் கண்டித்த தைவான், சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணியப் போவதில்லை என்று கூறியுள்ளது.