பெய்ஜிங்: நீதி, நேர்மையை நிலைநாட்டவும் நீண்டகால அமைதி, நிலைத்தன்மையை அடையவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உகந்த வழிகளில் அரபு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாக அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.
பெய்ஜிங்கில் வியாழக்கிழமை (மே 30) நடைபெற்ற சீன-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு கருத்தரங்கில் பங்கேற்று திரு ஸி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கும் வகையில் அரபு நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்று கூறியதாக சீன அரசாங்க ஊடகங்கள் குறிப்பிட்டன.
“சிக்கல் நிறைந்த உலகில் நல்லிணக்கத்துடன் வாழ பரஸ்பர மதிப்பு சிறந்த வழி. அதேபோல நீண்டகாலப் பாதுகாப்புக்கு நீதி, நேர்மையே அடித்தளம்,” என்று திரு ஸி கூறியதாக சின்ஹுவா தெரிவித்தது.

