ஜெர்மனியில் கனமழை, பெருவெள்ளம்: எல்லைதாண்டிய போக்குவரத்து முடங்கியது

1 mins read
c8d0189a-9b0f-4f5f-94a4-b9089daa58bc
தெற்கு ஜெர்மனியின் லுட்விக்ஸ்பர்க் அருகே நெக்கார் ஆற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தை சிலர் பார்வையிட்டனர்.  - படம்: ஏஎஃப்பி

பெர்லின்: தெற்கு ஜெர்மனியிலும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளிலும் பெய்த கனமழையால் போக்குவரத்துக்கும் தகவல் தொடர்புக்கும் பெருத்த இடையூறு ஏற்பட்டது. இடியுடன் கூடிய மழை வார இறுதியில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இடையூறுகள் தொடர்ந்தன.

இடையூறுகள் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 2) நீடித்ததால் பவேரியாவின் தலைநகரமான மியூனிக், சுவிட்சர்லாந்தின் ஸூரிக், ஆஸ்திரியாவின்பிரெகென்ஸ் ஆகியவற்றுக்கான எல்லைதாண்டிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக டச் பாஹ்ன் ரயில் போக்குவரத்து நிறுவனம் கூறியது.

ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களான துரிங்கியா, சேக்சொனி மற்றும் சேக்சொனி-அன்ஹால்ட் ஆகியன உட்பட கிட்டத்தட்ட நாட்டின் பாதி பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அப்பர் டான்யூப் ஆறு, ஜெர்மனியின் குறுக்கே கப்பல்கள் கடந்து செல்லக்கூடிய முக்கிய கடல்வழி ஆகும்.

அந்த ஆற்றிலும் தென்பகுதியில் ஓடும் துணை ஆறுகளிலும் நீர்மட்டம் அதிகமாக அல்லது ஆக அதிகமாக உயரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பெருவெள்ளம் காரணமாக ஆக்ஸ்பர்க் அருகே அணை ஒன்று உடைந்தது. அதேபோல, ஆக்ஸ்பர்க்கின் தென்மேற்கில் உள்ள பிஸ்சாக்கில் உள்ள வீடுகளில் சிக்கியிருந்த குடியிருப்பாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

பத்திரமாக வெளியேற்றப்ட்டவர்களுக்காக அவசரகால தங்குமிடங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சனிக்கிழமை (ஜூன் 1) அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்