பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம் அதிகம் பிரபலமில்லாத சுற்றுலாக் கட்டணத்தை கைவிடுகிறது.
தாய்லாந்திற்குள் விமானம் மூலம் நுழையும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 300 பாட் (S11) சுற்றுலாக் கட்டணம் வசூலிக்க உத்தேச திட்டம் இருந்தது. இதனை முந்தைய நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதமரான ஸ்ரேத்தா தவிசின் உத்தேச சுற்றுலாக் கட்டணம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார்.
2023 பிப்ரவரியில் முந்தைய அரசாங்கம் கொண்டு வந்த கொள்கையை தமது அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்றார் அவர்.
இந்தக் கட்டணத்துக்கு தனியார் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஒரு நபருக்கு 300 பாட் கட்டணம் வசூலிப்பதால் குறுகிய கால வருவாயை ஈட்ட முடியும். ஆனால் பரந்த கண்ணோட்டத்துடன் இந்தக் கட்டணம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் கடைத் தொகுதிகளிலும் இதர நடவடிக்கைகளிலும் அதிகம் செலவிடுவார்கள்.
இது, பொருளியலைத் தூண்டிவிடுவது மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கு சுற்றுலாக் கட்டணமில்லாமல் அதிக வருவாயை ஈட்டித் தரும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் துறைக்கு பங்களிக்கும் அனைவரின் கருத்துகளைக் கேட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம் மற்ற வரிகள் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட முடிந்தால் சுற்றுலாத் துறைக்கு தேவைப்படும் நிதியை ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

