பட்லர் (அமெரிக்கா): முன்னாள் அமெரிக்க அதிபரும் இவ்வாண்டின் அதிபர் தேர்தல் வேட்பாளருமான குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சியில் ஈடுபட்டது தாமஸ் மேத்யூ குரூக்ஸ், 20, என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவால் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள அவர், பேத்தல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் மேல்விவரங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.
பென்சில்வேனியா மாநிலத்தின் நீதிமன்ற ஆவணங்களின்படி, சந்தேகப் பேர்வழி குற்றப் கொண்டவராகத் தெரியவில்லை. ஆயினும், டிரம்ப்பை அவர் கொல்ல முயன்றதற்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூக்ஸ், குடியரசுக் கட்சிக்காரர் என்று வாக்காளர் பதிவேடு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது. எனினும், அவர் ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் தளமான ஆக்ட்புலூ மூலம் தேர்தல் இயக்கம் ஒன்றுக்கு 15 டாலர் (S$20) நிதி வழங்கியது, அமெரிக் அரசின் பிரசாரம் தொடர்பான நிதிக்கணக்குகள்மூலம் தெரியவந்துள்ளது.
பட்லர் நகரில் திரு டிரம்ப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகே உயரமானதோர் இடத்திலிருந்து அவரைச் சந்தேக நபர் சுட்டார் என்று அமெரிக்க உளவுத்துறை கூறியது. தாக்குதல்காரர் என்று சந்தேகிக்கப்பட்ட வெள்ளை இன ஆடவரின் உடலுக்கு அருகே சட்ட ஒழுங்கு அதிகாரிகள் ஏஆர்-15 ரக துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.