ஜோகூர் பாரு: ஜோகூரில் கல்வித் தரம் போட்டித்தன்மையுடனும் முற்போக்குடையதாகவும் விளங்க அம்மாநில அரசு புதிய திட்டங்களை அடுத்த ஆண்டு சில பள்ளிகளில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தத் திட்டம் ஜோகூர் மாநில கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்று மாநில முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி சனிக்கிழமை (ஜூலை 27ஆம் தேதி) அன்று தெரிவித்தார்.
இந்தத் கல்வித் திட்டம் ஜோகூர் இளவரசரின் பிரதிநிதி உயர்தர கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பிறப்பித்த உத்தரவுகளை ஒட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
“மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுடன் ஆங்கிலப் பாடத்திலும் தேர்ச்சிபெற முக்கிய கவனம் செலுத்தப்படும்.
“தொடக்கத்தில் இந்தத் திட்டம் இரண்டு தொடக்கப் பள்ளி, இரண்டு உயர்நிலைப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். அந்தப் பள்ளிகளை ஜோகூர் மாநில கல்வித் துறை தேர்வு செய்யும்,” என்று முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தின் இந்த அறிமுக கல்வித் திட்டம் ஜோகூருக்கு வருங்காலத்தில் ஆக்ககரமான பலன்களைத் தரும் என்று முதலமைச்சர் ஓன் சொன்னார்.

