நேப்பிடோ: மியன்மார் மற்றும் அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 152 பேர் கொல்லப்பட்டனர்.
மியன்மாரின் மூன்று நகரங்களில் 144 பேர் மாண்டுபோனதாகவும் 732 பேர் காயமுற்றதாகவும் முதற்கட்டக் கணக்கீட்டில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயிரிழப்பு 10,000ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க நிலவியல் ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது.
கட்டடங்கள், பாலங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் இடிந்து விழுந்ததுடன் சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சாகைங் நகரின் வடமேற்கில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.
இதனிடையே, தாய்லாந்தில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், 43 தொழிலாளர்கள் சிக்கியதாக காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்க அலுவலகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்டு வந்த அக்கட்டடம் தரைமட்டமானதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் காயமுற்றிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக பாங் சியூ மாவட்டத்தின் இணை காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மியன்மாரின் பல்வேறு பகுதிகளிலும் பேங்காக்கிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் ராணுவ அரசாங்கம், மனிதாபிமான உதவிக்குப் பிற நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அடிக்கடி காணப்படாத நிகழ்வு என நம்பப்படுகிறது.
தாய்லாந்து எல்லைக்கு அப்பால் மியன்மாரில், நாட்டின் பண்டைய அரச தலைநகரான மண்டலேயில் உள்ள பௌத்த குடியிருப்பின் மையத்தில் உள்ள ஒரு பள்ளிவாசல் பகுதியளவு இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்தின் சியாங்மாய், வியட்னாமின் ஹோ சி மின் சிட்டி, ஹனோய் ஆகிய நகரங்களிலும் மோசமான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகப் பலர் தெரிவித்தனர். மியன்மார் தலைநகர் நேப்பிடோவின் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன; கட்டடங்கள் சேதமடைந்தன.
நேப்பிடோ விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த அனைவரும் கொல்லப்பட்டதாக யாங்கோன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேப்பிடோ, மண்டலே விமான நிலையங்களின் செயல்பாடுகள் மூடப்பட்டுள்ளதாக ஆளும் ராணுவ ஆட்சிக்குழுவின் வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்மேற்குச் சீனாவில் உள்ள யூனான் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பெய்ஜிங் நிலநடுக்க அமைப்பு தெரிவித்தது. 7.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அமைப்பு சொன்னது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
மியன்மாரில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 1930லிருந்து 1956ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டை ரிக்டரில் ஏழுக்கும் அதிகமாகப் பதிவான நிலநடுக்கங்கள் ஆறு முறை உலுக்கின. அதோடு, 2016ல் மியன்மாரை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது