டெஹ்ரான்: ஈரானிய மாணவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். நாட்டின் சமயத் தலைவர்களுக்கு எதிராக அவர்கள் சினத்தை வெளிப்படுத்தினர்.
சென்ற மாதம் நடந்த கலவரங்களை அரசாங்கம் ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளின்போது ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். நிலைமையைச் சீராக்க ராணுவ ரீதியாய்த் தலையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டினார். இருப்பினும் அவரின் கவனம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தின்மீது திரும்பியது. ஈரானால் அணுகுண்டைத் தயாரிக்க முடியும் என்று மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் ஈரானும் உத்தேச ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சை அண்மையில் தொடங்கின. இரு தரப்புக்கும் இடையிலான சமரசப் பேச்சில் ஓமான் உதவி வருகிறது.
இதற்கிடையே, வாஷிங்டன் மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதன் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே விமானந்தாங்கிக் கப்பல்கள் இரண்டு, ஜெட் விமானங்கள், ஆயுதங்கள் முதலியற்றை வாஷிங்டன் அங்குக் குவித்துள்ளது.
டெஹ்ரானில் உள்ள ஷாரிஃப் பல்கலைக்கலைக்கழகத்தின் விண்வெளிப் பொறியியல் துறை வளாகத்திற்கு அருகில் சனிக்கிழமை (பிப்ரவரி 21) மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஃபார்சி மொழியில் அவர்கள் ‘அவமானம்’ என்று கூக்குரலிட்டனர். பல்கலையில் ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
வன்முறை முதலில் கடந்த ஆண்டு (2025) டிசம்பர் மாதம் வெடித்தது. நீண்டகாலமாக நிலவும் நிதிச் சிக்கலின் காரணமான ஏராளமானோர் அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். பின்னர் பாதுகாப்புப் படைகள் அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கின. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் மாண்டதாக அந்நாட்டின் சமய அமைப்புகள் தெரிவித்தன. ஈரானின் எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதச் செயல்களால் வன்முறை மூண்டதாக அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி ஊடகம் (எச்ஆர்ஏஎன்ஏ), கலவரத்தில் 7,000க்கும் அதிகமானோர் மாண்டதாகக் கூறுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் பொருளியல் கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள முடிவதாக ஈரானிய அதிகாரிகள் முதலில் கூறினர். பின்னர் ஆர்ப்பாட்டம் அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பியதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் கலவரத்தைத் தூண்டிவிடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

