சிட்னி: ஆஸ்திரேலியாவின் இணையத் தளங்கள் பயனாளர்களின் வயது வரம்பை அமலாக்கம் செய்யத் தடுமாறுகின்றன.
எனவே, உலகில் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடைகள் ஏற்படுத்திய முதல்நாடு என்ற பெருமைக்கு உரிய ஆஸ்திரேலியா அதனை அமலாக்குவதற்குத் தவறிவிட்டதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்தது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு சிறார்களுக்கு தடைகள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்று அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கிய அமைப்பு அந்த ஆய்வினை நடத்தியது.
2025 டிசம்பர் மாதம், சிறார்களுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய சமூக ஊடகத் தடை சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி இன்ஸ்டகிராம், ஸ்னாப்சாட், யூடியூப் போன்ற தளங்களை 16 வயதுக்கு உட்பட்டோர் பயன்படுத்தவும் தனிப்பட்ட கணக்குகளை அவற்றில் ஏற்படுத்திக் கொள்ளவும் தடை செய்யப்பட்டது.
அந்தத் தளங்களை இயக்கும் நிறுவனங்கள் தடைகளை அமலாக்க தகுந்த, நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். பல வழிகளில் பயனாளர்களின் வயதைக் கண்டறிய சோதனைகள் நடத்தவேண்டும் என்று அரசாங்கம் பரிந்துரை செய்திருந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலியா முன்மொழிந்த தடை பரவலாகக் குறைகூறப்பட்டு வருகிறது. பல ஆய்வுகளில் 16 வயதுக்குட்பட்டோர் தொடர்ந்து பல சமூக ஊடகத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஜூன் மாதம் அதிகபட்ச அபராதத் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்கியது. தொழில்நுட்பத் துறைசார்ந்த பெருநிறுவனங்கள் இயக்கும் சமூக ஊடகத் தளங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அரசாங்கம் எச்சரித்தது.
2025ஆம் ஆண்டு, மென்பொருள் சோதனைகள் செய்யும் குழுவினர் 1,000 ஆஸ்திரேலியர்களிடம் நடத்திய ஆய்வுகளின்போது, சமூக ஊடகத் தளங்களில் அவர்கள் 50 புதிய கணக்குகளைத் திறந்தனர்.
ஆனால் புதிய சட்டம் அமலில் இருந்தபோதும் சோதிக்கப்பட்ட சமூக ஊடகம் எதிலும் 16 வயதுக்கு மேற்பட்டோர் என்பதை உறுதி செய்யவேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்படவில்லை என்பது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது.
இதற்கு முன்பாக மென்பொருள் சோதனை முறையில் காணப்பட்ட இந்தக் குறைபாடுகள் வெளியிடப்படவில்லை. புகைப்படத்தைக் கொண்டு வயதை அறியும் மென்பொருளே தற்போது பயன்பாட்டில் உள்ளது.
ஒருவரின் இணைய நடவடிக்கையைக் கொண்டு அவரது வயதை நிர்ணயிக்கும் மென்பொருள் சிறார்களை அடையாளம் காணத் தவறுவதை ஆய்வாளர்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

