கோலாலம்பூர்: கிளந்தான் தலைநகர் கோத்தா பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அந்த விமான நிலையம் திங்கட்கிழமை (மார்ச் 16) அன்று தொடங்கி முழுமையாகச் செயல்படவுள்ளது.
புதிய முனையத்தின் விரிவாக்கம், விமான நிலையத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 15 லட்சத்தில் இருந்து 40 லட்சம் பயணிகளாக அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 17 லட்சமாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 16.2 விழுக்காடு அதிகமாகும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் விளக்கினார்.
பெரிய முனையக் கட்டடம், பயணிகளின் நடமாட்டத்தைச் சீராக்க புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளைப் பிரித்தல், வாடகை கார், பேருந்து மற்றும் மின் டாக்சி சேவைக்காகப் பிரத்தியேக பகுதி ஆகியவை சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தின் மேம்படுத்தப்பட்ட வசதிகளில் அடங்கும்.
இந்த மேம்பாடு, குறிப்பாக பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக விமான நிலையத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு, கிளந்தான் மாநிலத்திற்கான விமான இணைப்புகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
தற்போது, இந்த விமான நிலையத்தில் ஐந்து விமான நிறுவனங்கள் இயங்கி வருவதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.

