தைப்பே: தைவானிய அதிபர் லாய் சிங் டே, சீனாவுடன் தைவான் இணைக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்போம் என்று சூளுரைத்துள்ளார்.
சுயாட்சியுடன் செயல்படும் தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அந்நாட்டை இணைத்துக் கொள்ள ராணுவப் பலத்தைக்கூட பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீனா கூறியுள்ளது.
அது மட்டுமல்லாமல் அப்போதைக்கு அப்போது ராணுவப் பலத்தைக் காட்டியும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியும் தைவானை அது மிரட்டி வருகிறது.
இந்த நிலையில் தைவான் அதிபர் ஆவேசமாக பேசியிருக்கிறார்.
“இணைப்பை எதிர்க்கும் கடப்பாட்டையும் எங்களுடைய இறையாண்மையில் நுழைவதையும் கடுமையாக எதிர்ப்போம்,” என்று திரு லாய் குறிப்பிட்டார்.
தைவானிய தேசிய தினத்தை முன்னிட்டு அதிபர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
திரு லாய் மே மாதம் பதவியேற்றதிலிருந்து சீனா மேலும் நெருக்குதலை அளித்து வருகிறது.
தைவான் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது சீனா ராணுவப் பயிற்சிகளை நடத்தலாம் என்று முன்னதாக அமெரிக்க நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
தைவானின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் திரு லாயை ‘பிரிவினைவாதி’ என்று பெய்ஜிங் குறிப்பிடுகிறது.
முன்னைய அதிபர் டிசாய் இங்-வென்னைவிட சீனாவுக்கு எதிராக அவர் வெளிப்படையாக பேசி வருவதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது.
தைவானின் தாய்நாடு சீனா அல்ல என்று திரு லாய் கூறியபோது “விரோதத்தையும் மோதலையும் அதிகரிக்கும் தீங்கை நோக்கமாகக் கொண்டது,” என்று திரு லாய் மீது சீனா குற்றம்சாட்டியது.