தைப்பே: சிங்கப்பூரில் தைவானின் முதலீடுகள் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தைவானின் கேத்தே யுனைடெட் வங்கியின் சிங்கப்பூர் கிளையில் ஏறக்குறைய 100 பேர் பணியாற்றினர். ஆனால் 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக்கிறது.
தைவானின் முதலீடுகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருவதை இது பிரதிபலிக்கிறது.
புவிசார் அரசியல் பதற்றம், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு இடையே தைவான் அதன் வாடிக்கையாளர்களின் வலுவான தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதையடுத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தைவானின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சிங்கப்பூர், இவ்வட்டாரத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்த சிறந்த நுழைவாயிலாக விளங்குகிறது என்று கேத்தே யுனைடெட் வங்கியின் சிங்கப்பூர் பிரிவின் தலைமை நிர்வாகி திரு வின்ஃபீல்ட் வோங் தெரிவித்தார்.
“தைவானிய நிறுவனங்கள் சிங்கப்பூரை அந்நியச் செலாவணி வர்த்தகத்திற்கான ஒரு நல்ல தளமாகப் பார்க்கின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உற்பத்தியை மேம்படுத்த சிங்கப்பூர் சிறந்த இடமாகவும் இருக்கிறது,” என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அவர் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் அனைத்துலக சூழல் நிலவுகிறது. இதனால் தைவான் நிறுவனங்களின் புதிய முயற்சிகளுக்கு சிங்கப்பூரை ஒரு சோதனைத் தளமாகப் பயன்படுத்த முடியும்,” என்றார் அவர்.
சிங்கப்பூரின் போட்டித் திறன்மிக்க ஊழியர் அணியும் முதலீடுகளை ஈர்க்கும் மையமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மைய ஆண்டுகளாக தென்கிழக்கு ஆசியாவில் தைவானின் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க-சீனா வர்த்தகப் போர், பிரச்சினைக்குரிய நீரிணை போன்ற நிச்சயமற்ற சூழலால் தைவான் நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகி தென்கிழக்கு ஆசியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றன. சிங்கப்பூரின் அரசியல் நிலைத்தன்மையும் தைவான் முதலீடுகளை ஈர்த்து வருகின்றன.

