பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சீனப் பயணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்லாயிரக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பது குறித்து அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகச் சீன வர்த்தக அமைச்சு புதன்கிழமையன்று தெரிவித்தது.
உலகின் இரு பெரும் பொருளியல் நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் கடுமையான வர்த்தகப் போரில் ஈடுபட்டிருந்தன.
பின்னர், கடந்த அக்டோபர் மாதம் தென்கொரியாவில் சந்தித்த அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் ஓராண்டு காலத் தற்காலிக வர்த்தக நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் நடைபெற்ற உச்சநிலைமாட்டின் பலனாக இருதரப்புக்கும் இடையே வர்த்தக மன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
“சம அளவிலான பொருள்களுக்கு பரஸ்பரம் இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு ஏற்பாடு குறித்து விவாதிக்க இருதரப்பும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளன,” என்று சீன வர்த்தக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சின் இணையப்பக்கத்தில் அடையாளம் குறிப்பிடாத அதிகாரி ஒருவரின் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்தத் திட்டமிடப்பட்ட வரிக் குறைப்பு இருதரப்பிலும் தலா 30 பில்லியன் அமெரிக்க டாலர் (S$ 38.4 பில்லியன்) அல்லது அதற்கும் அதிக மதிப்பிலான பொருள்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

