பதில்வரி, துறைசார்ந்த வரி இரண்டும் ஏப்ரல் 2 விதிக்கப்படும்: டிரம்ப்

2 mins read
afa6cbaf-9b9f-495f-bc31-7963a6acb1ff
வாஷிங்டனுக்கு மார்ச் 16ஆம் தேதி விமானத்தில் சென்றபோது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பேசினார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: விரிவான பதில்வரியையும் கூடுதல் துறைசார்ந்த வரியையும் ஏப்ரல் 2ஆம் தேதிமுதல் விதிக்க உள்ளதாகத் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒருசில வேளைகளில் அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருள்கள் மீது இருவகை வரிகளும் விதிக்கப்படக்கூடும் என்று சிறப்பு விமானத்தில் (ஏர் ஃபோர்ஸ் ஒன்) இருந்தவாறு செய்தியாளர்களிடம் பேசினார் திரு டிரம்ப்.

“அவர்கள் நமக்கு வரி விதிக்க, நாம் அவர்களுக்கு வரி விதிக்கிறோம். அத்துடன் வாகனங்கள், எஃகு, அலுமினியம் மீது கூடுதல் வரி விதிக்கப் போகிறோம்,” என்று மார்ச் 16ஆம் தேதி கூறினார்.

இவ்வாறு திரு டிரம்ப் கூறி இருப்பது, மேலும் கடுமையான வரிவிதிப்பு முறையை அவர் கையாளத் திட்டமிட இருப்பதன் அறிகுறியாக உள்ளது.

தாம் குறிப்பிடும் ‘பதில்வரி’ தொடர்பில் தமது நிர்வாகம் செயல்பட்டு வருவதாக திரு டிரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார். ஒவ்வொரு நாட்டிலும் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வெவ்வேறு வரி விகிதம் கணக்கிடப்படும். அதன் சொந்த வரி மற்றும் வரி அல்லாத இடையூறுகளை அது கணக்கில் கொள்ளும்.

இருப்பினும், முக்கிய அமெரிக்கத் தொழில்துறைகளையும் தாம் தயார்செய்ய விரும்புவதாக அதிபர் கூறியிருந்தார். அவற்றில் வாகனங்கள், எஃகு, அலுமினியம், நுண்செயலிகள், மருந்துப் பொருள்கள் ஆகியவை அடங்கும்.

“நம் நாட்டுக்கு விடுதலை அளிக்கும் நாள் ஏப்ரல் 2. என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அறிவற்ற முறையில் அதிபர்கள் அள்ளிக் கொடுத்த சொத்தில் கொஞ்சம் நாம் திரும்பப் பெறுகிறோம்,” என்றார் திரு டிரம்ப்.

சீனாவில் ஏற்கெனவே திரு டிரம்ப் 20% வரியை விதித்துவிட்டார். அத்துடன் எஃகு, அலுமினியம் மீது 25% வரியையும் விதித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்