சீனாவில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான 13 வயது சிறுமி பெற்றோருக்குத் தெரியாமல் கிட்டத்தட்ட 85,000 வெள்ளி செலவளித்துள்ளார்.
நான்கு மாதங்களாக அந்த சிறுமி அவரது தாயாரின் வங்கி அட்டை மூலம் பணத்தை கைப்பேசி விளையாட்டில் வீணடித்துள்ளார்.
சிறுமி கைப்பேசியில் அதிக நேரம் செலவிடுவதைக் கண்ட அவளது பள்ளி ஆசிரியை சிறுமியின் தாயாரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பின்னர் தான் தாய்க்குத் தெரிந்தது சிறுமியின் திருட்டுத்தனம்.
வங்கியில் எவ்வளவு பணம் மீதம் உள்ளது என்று பார்த்த தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் வெறும் 0.5 யுவான் மட்டுமே இருந்தது.
செய்வது அறியாமல் அந்த பெண் தன் வங்கி கணக்கில் எப்படி பணம் பறிபோனது என்பதைப் பார்க்கும் காணொளி சீன ஊடகங்களில் பேசும் பொருளாக மாறியது.
ஒரு சிறுமி எப்படி இவ்வளவு பணத்தை செலவு செய்யமுடியும் என்று அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.
சிறுமி அவளது பள்ளி நண்பர்கள் சிலருக்கும் சேர்த்து விளையாட்டுக்கான செலவுகளை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிந்தது.
பெற்றோர் வீட்டில் இல்லாதபோது உணவு வாங்க சிறுமிக்கு வங்கி அட்டையும் அதன் கடவுச்சொல்லும் தரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி தாம் செய்த செலவுகளை கட்டமைப்பில் இருந்து அழித்தும் உள்ளார். அதனால் பெற்றோருக்கு செலவுகள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
சீனாவில் பதின்மவயதினர் கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.