பேங்காக்: தாய் லயன் ஏர் விமான நிறுவனம் 15க்கும் மேற்பட்ட பாதைகளில் விமானச் சேவைகளைக் குறைத்துக்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் விமான எரிபொருள் விலையாலும் குறைந்துள்ள பயணிகள் எண்ணிக்கையாலும் இவ்வாண்டு ஜூன் முதல் செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் விமானச் சேவைகளைத் தாய் லயன் ஏர் நிறுவனம் குறைக்கிறது.
குறைக்கப்படும் விமானச் சேவைகளில் புக்கெட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சேவையும் அடங்கும். ஜூன் 3ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை புக்கெட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அதையடுத்து ஆகஸ்ட் 2ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதிவரை வாரத்திற்கு நான்கு விமானச் சேவைகளுக்குப் பதிலாக இரண்டு சேவையை மட்டும் தாய் லயன் ஏர் நிறுவனம் மீண்டும் வழங்கும்.
இவ்வாண்டுக்கான கோடைக்கால பயணத் திட்டங்களை முன்னிட்டு விமான நிறுவனம் அந்தத் தற்காலிக மாற்றங்களை அறிவித்தது.
சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனீசியா, சிங்கப்பூர், நேப்பாளம் ஆகியவற்றுக்கான அனைத்துலகச் சேவைகள் பாதிக்கப்படும்.
மத்திய கிழக்கில் உள்ள பதற்றம் நீடிக்கும் நிலையில் அனைத்துலக விமானப் போக்குவரத்துத் துறை பலத்த அடிவாங்கியுள்ளது.
அதையடுத்து செயல்பாடுகளை மறுஆய்வு செய்யும்படியான நிலைக்குப் பல விமான நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

