பேங்காக்: தாய்லாந்தில் ஆடவர் ஒருவரின் அரைக்கால் சட்டைக்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிமெண்ட் தரையில் இருந்த மெத்தையில் தூங்கிக் கொண்டு இருந்த ஆடவர் கால்சட்டைக்குள் ஏதோ ஊர்வதை அறிந்து திடுக்கிட்டார்.
அவரது அலறலைக் கேட்ட நண்பர்களில் ஒருவர் விலங்கு மீட்பாளர்களை உதவிக்கு அழைத்தார்.
தாய்லாந்தின் கிழக்குப் பகுதி ராயோங் நகரில் ஜூன் 8ஆம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது.
அதன் காணொளியை பாம்புபிடி வீரரான நெர் குவாய் தாய் என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
தமது வலது பக்கத்தில் பாம்பு இருப்பதாக ஆடவர் சைகை காட்ட, இரும்புக் கொக்கியை அரைக்கால் சட்டைக்குள் புகுத்தி பாம்பை சாதுர்யமாக அவர் மீட்பது அந்தக் காணொளியில் பதிவாகி உள்ளது.
மீட்கப்பட்டது நச்சுத்தன்மை கொண்ட நல்ல பாம்பு என்று பின்னர் தெரியவந்தது.
அச்சம்பவத்தைக் காண ஆடவரின் வீட்டைச் சுற்றி ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல, பாம்பு மீட்கப்படுவதைக் காட்டும் காணொளியை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
காணொளியைப் பார்த்து கருத்துத் தெரிவித்தவர்களில் சிலர், அரைக்கால் சட்டைக்குள் பாம்பு புகுந்ததைக் குறிப்பிட்டு நக்கலாகப் பதிவிட்டனர்.

