பேங்காக்: நாடு முழுவதும் விலைவாசி அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு உதவ தாய்லாந்தின் வர்த்தக அமைச்சு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதேவேளை, அந்நாட்டின் பச்சைக் கொடி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் (Green Flag Plus project) விவசாயிகளின் உரச் செலவைக் குறைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கிழக்குப் பூசலால் ஏற்படும் பாதிப்பை விவரிக்கும் நிகழ்வின்போது தாய்லாந்தின் உள்நாட்டு வர்த்தகப் பிரிவின் தலைமைச் செயலாளர் சந்தாபத் பஞ்சாமனோன்ட் திட்டங்களை அறிவித்தார்.
‘தாய்லாந்து மக்கள் ஒருவருக்கொருவர் உதவும் திட்டம்’ (Thai Help Thai scheme) அவற்றில் ஒன்றாகும். இதன்கீழ் வர்த்தக அமைச்சு, ஆடைகள் உள்ளிட்டவற்றை விற்கும் கடைகள் (department stores), அத்தியாவசியப் பொருள்களை விற்கும் கடைகள், முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோக நிறுவனங்களுடன் இணைந்து 50 விழுக்காடு வரையிலான விலைக் கழிவு வழங்கப்படும்.
பிரபல நிறுவனங்களின் பொருள்களுக்கு ஈடான தரம்கொண்ட மாற்றுப் பொருள்களுக்கு இந்த விலைக் கழிவு பொருந்தும். இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கும்.
ஏற்கெனவே தயார்செய்யப்பட்ட உணவு வகைகளின் (ready-made meals) விலையைக் கட்டுப்படியாக வைக்கவும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அளவுக்கதிகமான விலையில் உரம் விற்கப்படுவதைத் தடுக்கவும் அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவறு நடந்தால் உரிய விசாரணை மேற்கொள்வது போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

