தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம்

தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்திற்கு அங்கீகாரம்

1 mins read
487f371a-b386-4ab2-a9cf-eb71adc4ec06
ஒரே பாலினத் திருமண மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே கொண்டாட்டத்தில் இறங்கிய பாலின ஈர்ப்பு விருப்புரிமையாளர்கள். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஒரே பாலினத் திருமண மசோதாவிற்கு தாய்லாந்து செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அம்மசோதா மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மன்னரும் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், அரசிதழில் வெளியிட்ட 120 நாள்களுக்குப் பிறகு அச்சட்டம் நடப்பிற்கு வரும்.

இதனையடுத்து, ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிக்கும் முதல் தென்கிழக்காசிய நாடு என்ற பெருமையைத் தாய்லாந்து பெறவுள்ளது.

ஒரே பாலினத் திருமணத்தை ஏற்கும் மூன்றாவது ஆசிய நாடு தாய்லாந்து. தைவானும் நேப்பாளமும் ஏற்கெனவே அத்தகைய திருமணங்களை அங்கீகரித்து வருகின்றன.

இதனிடையே, வரும் அக்டோபர் மாதத்தில் தாய்லாந்தில் முதன்முறையாக ஒரே பாலினத் திருமணங்கள் நடைபெறும் என்பது ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

“இன்றைய நாள் (ஜூன் 18) தாய்லாந்து மக்கள் புன்னகைக்கும் நாள். மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது,” என்று ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துன்யவாஜ் கமொல்வோங்வாட் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரே பாலின விருப்புரிமையாளர்களும் (எல்ஜிபிடிகியூ+) இதனை ஒரு முக்கியமான முன்னோக்கிய நடவடிக்கையாகக் குறிப்பிடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்