பேங்காக்: தாய்லாந்தில் கஞ்சா பூ அல்லது மொட்டு, மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கட்டுப்படுத்தப்பட்ட மூலிகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த பொது சுகாதார அமைச்சின் புதிய ஒழுங்குமுறை ஒன்றை தாய்லாந்து அரசிதழ் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) வெளியிட்டது.
உடனடியாக நடப்புக்கு வந்த அந்த ஒழுங்குமுறை, கஞ்சா விளம்பரம், பொது விற்பனை, பொழுதுபோக்கு பயன்பாடு ஆகியவற்றைத் தடை செய்கிறது.
கஞ்சா, குறிப்பாக அத்தாவரத்தின் பூ, தற்போது சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட மூலிகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கஞ்சாவை வணிக நோக்கங்களுக்காக ஆய்வு, ஏற்றுமதி, விற்பனை அல்லது பதனீடு செய்ய விரும்புவோர் அதற்குரிய உரிமத்திற்கு விண்ணப்பித்து நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்:
எனினும், உரிமம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டால், மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
இதில், மருத்துவத் தொழில் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள்; தாய்லாந்து பாரம்பரிய மருத்துவர்கள், தாய் பாரம்பரிய மருத்துவ தொழில் சட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தாய் பாரம்பரிய மருத்துவர்கள், நாட்டுப்புற மருத்துவர்கள்; மருத்துவத் தொழில் சட்டத்தின் கீழ் வரும் சீன மருத்துவர்கள்; மருந்தகத் தொழில் சட்டத்தின் கீழ் மருந்தாளுநர்கள்; பல் மருத்துவத் தொழில் சட்டத்தின்கீழ் வரும் பல் மருத்துவர்கள் ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக உரிமம் பெற்ற வணிகங்கள் கஞ்சா கட்டுப்பாட்டுக்கான புதுப்பிக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க வேண்டும் என்பதையும் புதிய ஒழுங்குமுறை கட்டாயப்படுத்துகிறது.

