தாய்லாந்தின் ஜனநாயகக் கட்சி மூவரை அதிபர் வேட்பாளர்களாக அதன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) அறிமுகம் செய்துள்ளது.
அந்த மூவரில் ஒருவர் பழைமைவாத முன்னாள் பிரதமரும் கட்சித் தலைவருமான அபிசிட் வெஜ்ஜாஜிவ. கட்சித் துணைத் தலைவர்களான திரு கோர்ன் சட்டிகவனிஜ், திருவாட்டி கார்ன்டீ லியோபெய்ரொட் இருவரும் மற்ற வேட்பாளர்கள்.
ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காணொளியில் ‘தாய்லாந்து எப்படி வறுமையிலிருந்து தப்பிக்கலாம்?’ என்ற கேள்வியைக் கட்சி கேட்டிருந்தது. தாய்லாந்தை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது எப்படி என்று தெரிந்த தலைவர்களைக் கட்சி முன்னிலைப்படுத்துவதாகக் காணொளியில் குறிப்பிட்டது.
அனைத்துலக நிதி நெருக்கடியின்போது 2008ஆம் ஆண்டிலிருந்து 2011ஆம் ஆண்டு வரை திரு அபிசிட் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தாய்லாந்தை வழிநடத்தியதாகக் கட்சி கூறியது.
நேர்மையான அரசியல், வெளிப்படையான கட்டமைப்புகள் ஆகியவை மூலம்தான் தாய்லாந்து வறுமையிலிருந்து மீள முடியும் என்று திரு அபிசிட் கூறினார்.
அதே குறிக்கோளை நிறைவேற்றக்கூடியவர் பொருளியல் தலைவர் திரு கோர்ன் என்று கட்சி அறிமுகம் செய்தது. 44 வயதில் உலக நிதி அமைச்சர் விருதைத் திரு கோர்ன் பெற்றுக்கொண்டதைக் கட்சி சுட்டியது.
வறுமையிலிருந்து உண்மையாகத் தப்பிக்கவேண்டும் என்றால் பொருளியலை மறுநிர்மாணம் செய்து நியாயமான போட்டியைக் கொண்டிருக்கவேண்டும் என்றார் திரு கோர்ன்.
மின்னிலக்கப் பொருளியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் திருவாட்டி கார்ன்டீ என்று கட்சி சொன்னது.

