தாய்லாந்து மன்னராட்சியை விமர்சனங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தைத் திருத்த முயன்றதாக, 44 தற்போதைய மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட மனுவைத் தாய்லாந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத் திருத்த முயற்சி, ஒழுக்க நெறிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது கலைக்கப்பட்டுள்ள ‘மூவ் ஃபார்வர்ட்’ (Move Forward) கட்சியும் அதன் தற்போதைய வடிவமான மக்கள் கட்சி (பீப்பிள்ஸ் பார்ட்டி) உறுப்பினர்களும் இதில் சிக்கியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் அரசியலில் ஈடுபட ஆயுட்காலத் தடை விதிக்கப்படலாம்.
ஜூன் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த விசாரணையில், தற்போதைய கட்சித் தலைவர் நத்தாபோங் ருவேங்பான்யவுத் உட்பட தற்போதைய எம்.பி.க்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், விசாரணை முடியும் வரை அவர்கள் பதவியில் நீடிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மன்னராட்சியைத் தீவிரமாகப் பாதுகாக்கும் தாய்லாந்தின் சட்டத்தைத் திருத்த முயன்றது அரசியலமைப்பிற்கு எதிரானது என ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தின் முற்போக்கு எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தேர்தல்களில் பெரும் ஆதரவைப் பெற்றபோதிலும், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்டச் சிக்கல்களால் அந்தக் கட்சியினர் ஆட்சி அமைக்க முடியாமல் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் நடந்த தேர்தலிலும் இக்கட்சி இரண்டாம் இடத்தையே பிடித்தது.

