கோலாலம்பூர்: தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தமது நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் என்று ராய்ட்டர்ஸ் ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) செய்தி வெளியிட்டுள்ளது.
நடந்துவரும் மத்திய கிழக்குப் போரில் ஈரானுக்கு ஆதரவாக நிற்கும் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
“ரமலான் மாதத்தில் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராகப் பயங்கரத் தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்த நீதியை விரும்பும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் (இந்தோனீசியா, மலேசியா, புருணை) அதன் அரசாங்கங்களுக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தொடங்கிய ராணுவத் தாக்குதலாலும் அதற்குப் பதிலடியாக எதிரிகள் எனக் கருதி அண்டை நாடுகளைக் குறிவைத்து ஈரான் பாய்ச்சும் ஏவுகணைகளாலும் மத்திய கிழக்கு வாட்டாரமே பதற்றத்தில் தள்ளாடுகிறது.
ஈரானிய அரசாங்கத்தின் முன்னாள் தலைவரான அயத்துல்லா அலி கமெனி, பாதுகாப்புத் துறைத் தலைவர் அலி லாரிஜானி போன்ற முக்கியத் தலைவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

