தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கைது

1 mins read
திரு கான், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு
e7e8ffec-6788-4f2c-b604-c570bc1ad99f
நவம்பர் 24ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரன் கானை விடுவிக்கக் கோரி ஆதரவாளர்கள் பேரணி நடத்திய வேளையில் காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். - படம்: ஏஎஃப்பி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரு கானைச் சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி ஆதரவாளர்கள் பேரணி நடத்துவதற்கு முன்னர், தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடக்கநிலை அமலில் இருந்தது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குமேல் சிறையிலிருக்கும் திரு கான் மீது 150க்கும் அதிகமான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் புகழ் மங்கவில்லை. அந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று திரு கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) கூறுகிறது.

இவ்வேளையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) திரு கானின் ஆதரவாளர்கள் ஏறக்குறைய 4,000 பேர் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் மாநிலப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஐவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று தெரிகிறது.

சனிக்கிழமையிலிருந்தே கப்பல் கொள்கலன்களைப் பயன்படுத்திக் காவல்துறையினர் இஸ்லாமாபாத்தை முடக்கியுள்ளனர். பிடிஐ கட்சியினர் கோட்டையாகக் கருதப்படும் இடங்களை இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் முக்கியச் சாலைகளும் நெடுஞ்சாலைகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திரு கான், அவரது மனைவி புஷ்ரா பீபீ, முன்னாள் அதிபர் டாக்டர் அரிஃப் அல்வி உள்ளிட்ட பிடிஐ கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மீது நவம்பர் 24ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் புதிய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் அந்த வழக்கு பதிவாகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்