தாய்லாந்து குண்டுவெடிப்பில் மூவர் மரணம்; சந்தேக நபர்கள் இருவர் கைது

1 mins read
2f795816-b919-45af-ad29-e4a44b31bc0d
குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தில் ஒரு தாய்லாந்து இளையரும் மியன்மாரின் கேரன் போராளி என நம்பப்படும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: பிக்சபே

பேங்காக்: மியன்மாருக்கு அருகில் உள்ள தாய்லாந்து நாட்டுப் பகுதியில் விழா ஒன்றில் குண்டுவெடித்தது தொடர்பாக தாய்லாந்து இருவரைக் கைது செய்துள்ளது.

அந்த குண்டுவெடிப்பில் மூவர் மரணமடைந்தனர், பலர் காயமடைந்ததாக அந்நாட்டு காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 14ஆம் தேதி) கூறியது.

தாய்லாந்தின் உம்பாங் வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13ஆம் தேதி) நடைபெற்ற விழாவில் அங்குள்ள நடன மேடை ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததாக காவல்துறை கூறியது.

இதில் இருவர் உடனடியாக மரணமடைந்தனர் என்றும் மேலும் ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விழாவில் ஏறத்தாழ 8,000லிருந்து 9,000 பேர் கூடியிருந்த நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவத்தில் கூடுதலாக 48 பேர் காயமடைந்ததாக காவல் துறை சொல்கிறது.

இதன் தொடர்பில் தாய்லாந்து காவல்துறையினர் அந்நாட்டு இளையர் ஒருவரையும் மியன்மாரின் கேரன் போராளி அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் தாங்கள் கைது செய்துள்ளதாக விளக்கமளித்தனர்.

அந்த விழாவில் கேரன் போராளி தான் முன்னர் சண்டைபோட்ட குண்டர் கும்பலைச் சேர்ந்த ஒருவரை சந்தித்ததால் அவன்மீது வெடிகுண்டை வீசியெறிந்ததாக தாய்லாந்து காவல்துறை தலைவர் மேஜர்-ஜெனரல் சம்ரிட் எக்கமோல் கூறினார்.

குறிப்புச் சொற்கள்