பயிலகுப்பே (இந்தியா): சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வெளியே நாடுகடந்து வாழும் திபெத்தியர்கள் ஞாயிற்றுக் கிழமை அன்று (ஏப்ரல் 26) புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பை நடத்தியிருக்கின்றனர். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் திபெத்திய மத்திய நிர்வாகத்தை ஒரு பிரிவினைவாதக் குழுவின் செயல் என்று சீனா குறிப்பிட்டது.
2011ல் தலாய் லாமா அரசியல் அதிகாரத்தை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகு நடத்தப்பட்ட முதல் வாக்களிப்பு இது.
தங்களது ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இல்லாத எதிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிக இளையர்களின் பிரதிநிதித்துவத்துக்கு வாய்ப்பு அளிக்கும் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கக் காத்திருந்த டென்ஸின் செரிங், 19, “எங்களுடைய வாக்குகள் முக்கியம்,” என்றார்.
“எங்களுடைய சமூகம் எதனை நோக்கிச் செல்கிறது என்பதற்கு எங்களுடைய குரல் அவசியம்,” என்று கர்நாடாகவில் உள்ள பைலகுப்பேவில் அவர் தெரிவித்தார்.
திபெத்தியர்களின் வாக்களிப்பு, சீனா அல்லாத 27 நாடுகளில் நடைபெறவிருக்கிறது.
தகுதி பெற்ற 91,000 வாக்காளர்களில் உயரமான இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் பௌத்த துறவிகள், தெற்காசியாவின் பெருநகரங்களில் உள்ள அரசியல் அகதிகள் மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள அகதிகள் ஆகியோர் அடங்குவர்.
1959ல் சீனப் படைகள் ஒரு கிளர்ச்சியை ஒடுக்கியபோது திபெத்திய தலைநகர் லாசாவிலிருந்து தப்பி இந்தியாவில் வசித்துவரும் 90 வயதான தலாய் லாமா, இன்னும் பல ஆண்டுகள் வாழவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

