மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் 250 பேருடன் பயணம் செய்த ரயில் ஒன்று தடம் புரண்டது. அதில் 13 பேர் மாண்டனர். 98 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28), நாட்டின் தென்பகுதியில் உள்ள ஓஸ்கா மாநிலத்தில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலின் முன்பகுதி திடீரெனத் தண்டவாளத்திலிருந்து வெளியேறியதால் அது தடம் புரண்டதாகக் கூறப்பட்டது.
விபத்து நடந்த ரயில் தடத்தை மெக்சிகோவின் கடற்படை நிர்வகிக்கிறது. அது தற்போது மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்குக் கடற்படை மூத்த அதிகாரிகள் செல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் மெக்சிகோ அதிபர் கிளவ்டியா செயின்பாம் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக மெக்சிகோவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ரயில் மெக்சிகோ வளைகுடாவிற்கும் பசிபிக் கடலுக்கும் இடையில் பயணம் மேற்கொள்ளும். அந்த ரயில் சேவையில் பயணிகள் பயணம் செய்யவும் சரக்குகளை எடுத்துச் செல்லவும் அனுமதி உண்டு
2023ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் தடம் சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

