வாஷிங்டன்: பிப்ரவரி 1ஆம் தேதியன்று சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 விழுக்காடு வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக நெருக்கடிநிலையை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபென்டனில் நெருக்கடிநிலையில் சீனாவின் பங்களிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகையில் பேசியபோது தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.
போதைப்பொருளான ஃபென்டனிலை கனடாவுக்கும் மெக்சிகோவுக்கு சீனா அனுப்புவதாக அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தினார்.
அந்த இரு நாடுகளிலிருந்து அவ்வகை போதைப்பொருள் அமெரிக்காவுக்குள் வருவதாக அவர் கூறினார்.
அதிபர் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கடந்த வாரம் பேசியதாகவும் வர்த்தகம், ஃபென்டனில் விவகாரம் போன்றவற்றை குறித்து அவர்கள் இருவரும் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.

