டெஹ்ரான்/வாஷிங்டன்: ஈரான், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈரான் தரப்பு இதனை மறுப்பதற்கு, அந்நாட்டின் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் தங்கள் சொந்த தரப்பினராலேயே கொல்லப்படலாம் என்ற அச்சமே காரணம் என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கான இரவு விருந்து ஒன்றில் புதன்கிழமை (மார்ச் 25) பேசிய அவர், “உண்மையில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள், எப்படியாவது ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அவர்கள் துடிக்கிறார்கள். ஆனால், அதைச் சொன்னால் தங்கள் சொந்த மக்களாலேயே தாங்கள் கொல்லப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்,” என்றார்.
“அவர்கள் எங்களாலும் கொல்லப்படலாம் என்று பயப்படுகிறார்கள்,” என்றும் அவர் சொன்னார்.
தற்போது நான்காவது வாரமாக நீடிக்கும் மோதலில் ஈரான் ‘அழிக்கப்பட்டு’ வருவதாக திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இன்னமும் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
திரு டிரம்ப்பின் இந்தக் கருத்துக்கு முன்னதாகப் பேசியிருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அரக்சி, “நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் இல்லை,” எனக் கூறியிருந்தார்.

