வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அடுத்த அதிரடியாக வெளிநாடுகளில் புதிய மாணவர் விசா வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள அதன் தூதரகங்களிடம் புதிய மாணவர் விசா மற்றும் பரிமாற்ற விசா வழங்குவதற்கான நேர்காணல்களை நடத்த வேண்டாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கிடையிலான உள்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ராய்ட்டர்ஸ் மே 27ஆம் தேதி இதனை வெளியிட்டது.
வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகப் பதிவுகளை சரி பார்ப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ருபியோ, மாணவர் மற்றும் பரிமாற்ற வருகையாளர்களை சமூக ஊடகம் வழியாகச் சரிபார்க்கும் புதிய புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பாய்வுக்குப் பிறகு மேல்விவரங்கள் வெளியிடப்படும் என்று உள்விவகாரத் தகவலில் குறிப்பிட்[Ϟ]டிருந்தார்.
அதுவரை விசாவுக்கான மாணவர் நேர்க்காணல்களை நிறுத்திவைக்குமாறு வெளிநாட்டில் உள்ள தூதரகங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகம் மாணவர்களுக்கான விசாக்களை கடுமையாக்கி வருகிறது. அதன் தொடர்பில் மாணவர் விசாக்களை ரத்து செய்யவும் அல்லது வெளியேற்றவும் பரவலான நடவடிக்கைகளை அது தீவிரப்படுத்தி வருகிறது.
“மாணவர், பரிமாற்ற வருகைக்கு விசா வழங்கும் தற்போதைய நடைமுறைகளும் நடவடிக்கைகளும் பரிசீலனைகளும் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் பிறகு வழிகாட்டிகளை வெளியிடும் திட்டமுள்ளது. அத்தகையோரின் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகப் பதிவுகளும் சரிபார்க்கப்படும்,” என்று உள்தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதனை வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் மே 27ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக் கழக வளாகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர், பேராசிரியர் உட்பட பல நூறு பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை டிரம்ப் நிர்வாகம் நிறுத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.