வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, தேசிய மானுடவியல் மன்றத்தில் உள்ள பல உறுப்பினர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நியமித்த நான்கு உறுப்பினர்கள் மட்டும் மன்றத்தில் எஞ்சியிருப்பதை அதன் இணையத்தளத்தில் காண முடிகிறது.
தமது கொள்கைக்கு ஏற்ப செயல்படுவோரை மன்ற உறுப்பினர்களாக நியமிக்கத் திரு டிரம்ப் திட்டமிடுவதாக அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை, வேறெந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை.
தேசிய மானுடவியல் மன்றத்தில் கல்விமான்கள், மனிதநேய வல்லுநர்கள் என 26 பேர் ஆறாண்டுத் தவணைக் காலத்துக்கு அதிபர் வழக்கமாக நியமிப்பார்.
அந்த மன்றம், கொள்கை விவகாரங்கள், மானியங்கள், நிதி போன்றவை குறித்து தேசிய மானுடவியல் தொடர்பான அறக்கட்டளைக்கு ஆலோசனை வழங்கும்.
இந்நிலையில் திரு டிரம்ப்பின் நடவடிக்கை குறித்து மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன.
கல்வி நிலையங்கள், கலை நிலையங்கள், வரலாற்று இடங்கள், அரும்பொருளகங்கள் ஆகியவைமீது திரு டிரம்ப் நடத்தும் தாக்குதல் பல ஆண்டுகளாகக் கட்டிக்காத்த சமூக முன்னேற்றத்தைக் கீழறுக்கிறது என்றும் அமெரிக்காவின் முக்கிய வரலாற்று மைல்கல்களையும் மதிக்க தவறுகிறது என்றும் அவை அமைப்புகள் சாடின.
திரு டிரம்ப் தேசிய மானுடவியல் மன்ற உறுப்பினர்களைப் பதவிநீக்கம் செய்தது பற்றி வாஷிங்டன் போஸ்ட் நாளேடு இதற்கு முன் தெரிவித்தது. பதவிநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் அவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலையும் நாளேடு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தேசிய மானுடவியல் மன்றம் குறைந்தது 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும் புதிய உறுப்பினர்களின் பதவிகளை செனட் சபை உறுதிபடுத்த வேண்டும் என்றும் நாளேடு சொன்னது.
இருப்பினும், மன்றத்திலிருந்து நீக்கப்பட்டோரில் சிலர் திரு டிரம்ப்பால் இதற்கு முன் நியமிக்கப்பட்டவர்கள். அதுகுறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்காவில் உள்ள பல கலாசார, கலைகள், கல்வி நிலையங்கள் அமெரிக்காவின் வரலாற்றைச் சரிவரப் பிரதிபலிக்கவில்லை என்றும் அமெரிக்காவுக்கு எதிரானவற்றை முன்வைக்கின்றன என்றும் திரு டிரம்ப் கூறியிருந்தார்.