வாஷிங்டன்: ஈரானிய அணுவாயுதத் தளங்களின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அந்தத் தாக்குதலை உறுதிசெய்து அதனை “அற்புதமான ராணுவ வெற்றி” என வர்ணித்துள்ளார்.
மத்திய கிழக்கில் (சுற்றியுள்ளோரைத்) துன்புறுத்தி வரும் ஈரான் அமைதியை நாடவேண்டும். ஈரான் அவ்வாறு செய்யத் தவறினால் வருங்கால தாக்குதல் இன்னும் பெரிய அளவில் இருக்கும். அவற்றை நடத்துவதற்கு மேலும் எளிதாக இருக்கும் என அவர் எச்சரித்தார்.
குறிவைக்கப்பட்ட தளங்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) காலை 10 மணி தொடங்கிய உரையில் திரு டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அமெரிக்காவும் இஸ்ரேலும் குழு உணர்வுடன் செயலாற்றியதாக அவர் கூறினார்.
அமைதி விரைவில் ஏற்படாவிட்டால் தாக்குதல்கள் தொடரும் என்றும் திரு டிரம்ப் எச்சரித்தார்.
“இது தொடர முடியாது. ஈரானுக்கு நிம்மதி, அல்லது கடந்த எட்டு நாள்களில் நடந்த நிகழ்வுகளைவிடப் பெருந்துயர் ஏற்படும். குறிவைக்கப்பட்டுள்ள மற்ற பல இடங்கள் இருப்பதை நினைவில் கொள்க,” என்று அவர் கூறினார்.
பல நாள் திட்டமிடலுக்கும் திரு டிரம்ப் தனக்குத் தானே விதித்த இரண்டு வார காலக்கெடுவுக்கும் பிறகு, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையில் சேர அவர் முடிவெடுத்திருக்கிறார்.
இந்த முடிவு, மோதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தாக்குதலை மட்டும் நடத்த அமெரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் ஈரானில் ஆட்சி மாற்றம் செய்ய தாம் முற்படவில்லை என்று அமெரிக்கா முன்னதாகத் தெரிவித்திருந்ததது.
அமெரிக்க படைகள் ஈரானின் முக்கியமான அணுசக்தித் தளங்களான நன்டாஸ், இஸ்ஃபஹான், ஃபோர்டோ ஆகிய மூன்று தளங்களை அமெரிக்கா தாக்கியிருப்பதாக திரு டிரம்ப் தெரிவித்தார்.
ஃபோர்டோவில் ஆறு பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாகவும் 30 டொமஹோக் குண்டுகள் மற்ற அணுசக்தித்தளத்தில் எறியப்பட்டதாகவும் திரு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவி்ன பி2 பாம்பர் போர்விமானங்கள் இந்தத் தாக்குதில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.