தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அதிரடி முடிவு

2 mins read
a2354980-e699-4e8e-bea9-186a441692aa
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் இணைந்து அதிபர் டோனல்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: காஸா வட்டாரத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்னும் அதிரடி யோசனையை அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை வரவேற்றுப் பேசும்போது அவர் அந்த யோசனையை வெளிப்படுத்தினார்.

மேலும், போரால் சீர்குலைந்துவிட்ட வட்டாரத்தைவிட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என்றும் எகிப்து, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் குடிபெயர வேண்டும் என்றும் முன்பு தெரிவித்த தமது கருத்தை திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

அந்தக் கருத்தை பாலஸ்தீனர்களும் எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகளும் ஏற்கவில்லை.

வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) திரு நெட்டன்யாகுவுடன் இணைந்து திரு டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“காஸா வட்டாரத்தை அமெரிக்கா கைப்பற்றும். அதனைச் சொந்தமாக்கிக்கொள்வதுடன் அங்கு நிறைய பணிகளைச் செய்ய உள்ளோம்.

“காஸா வட்டாரத்தில் வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்துவோம். உருக்குலைந்த கட்டடங்களை அகற்றி, நிலப்பகுதியைச் சமப்படுத்துவோம்.

“அங்கு, ஏராளமானோருக்கு வேலைகளையும் வீடுகளையும் அளிக்கும் வகையில் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்துவோம்,” என்றார்.

“ஆனால், அங்கு ஏற்கெனவே போராடி, பல உயிர்களை இழந்து, பரிதாபமான முறையில் வாழும் அதே மக்களை வைத்துக்கொண்டு அந்த சீரமைப்புப் பணிகளைச் செய்ய முடியாது.

“காஸா வட்டாரத்தில் வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு மனிதநேயமிக்க பிற நாடுகளுக்குக் குடிபெயர்வதே நல்லது,” என்று திரு டிரம்ப் கூறினார்.

பாலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்குத் திரும்பி வந்து வாழ்வது போன்ற யோசனையை அவரது கருத்து உள்ளடக்கியதாகத் தெரியவில்லை.

திரு நெட்டன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் இதுவரை கண்டிராத ஆகச் சிறந்த நண்பர்,” என்று திரு டிரம்ப்பைப் புகழ்ந்தார்.

கொந்தளிப்பு ஏற்படும்: ஹமாஸ்

ஆனால், காஸாவைக் கைப்பற்றப் போவதாக திரு டிரம்ப் தெரிவித்த கருத்துகள் அந்த வட்டாரத்தில் பிரச்சினையைக் கிளப்பும் என்று ஹமாஸ் குழுவைச் சேர்ந்த சமி அபு ஸுக்ரி கூறியுள்ளார்.

“காஸாவைக் கட்டுப்படுத்தப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகள் அபத்தமானவை. இதுபோன்ற கருத்துகள் அந்த வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அபு ஸுக்ரி கூறினார்.

ஆஸ்திரேலியாவின் போக்கில் மாற்றமில்லை

திரு டிரம்ப்பின் காஸா ஆக்கிரமிப்பு கருத்துகள் வெளியானாலும் மத்திய கிழக்கு தொடர்பான ஆஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலுடன் இணைந்து பாலஸ்தீன அரசாங்கத்தை ஏற்படுத்தி அங்கு இருநாட்டு மக்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய சூழலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு வழங்குவதாகவும் டிரம்ப்பின் அறிவிப்புக்கு பிறகும் அதில் மாற்றமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்