வாஷிங்டன்: அணுசக்தித் திட்டத்தை ஈரான் கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா விரைந்து முடிவெடுக்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 12) ஓமானில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமானதாகவும் ஆக்ககரமானதாகவும் அமைந்ததாகக் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தையை இந்த வாரமும் தொடர அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்நிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், ஈரான் விவகாரத்தில் மிகவும் விரைவாக முடிவெடுக்கப்படும் என்றார். இருப்பினும், அது குறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
முன்னதாக, அணுசக்தித் திட்டம் தொடர்பில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு டிரம்ப் அண்மையில் எச்சரித்து இருந்தார்.
டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையில் இப்போதுதான் முதல்முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், 2017-2021 இடையில் திரு டிரம்ப் அதிபராக இருந்தபோதும் ஈரானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், “பேச்சுவார்த்தை நல்லபடியாகப் போய்க்கொண்டு இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“அது முடியும் வரை குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஈரான் நிலவரம் சிறப்பான முறையில் முன்னேற்றம் காணும் எனக் கருதுகிறேன்,” என்று கூறியிருந்தார்.