பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்வார் என்பதை சீனா திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது.
இந்தப் பயணத்தின்போது அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் ஈரான், வர்த்தக விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு டிரம்ப், முதலில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் சீனாவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். இருப்பினும், ஈரான் போர்ச் சூழலில் கவனம் செலுத்துவதற்காக அவர் தனது பயணத்தைத் தள்ளிவைத்தார்.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளியல் நாடுகளின் தலைவர்கள், ஆறு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசவுள்ளனர்.
திரு டிரம்ப், திட்டமிட்டபடி புதன்கிழமை பெய்ஜிங் சென்றடைவார். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் பேச்சுவார்த்தை நடைபெறும். 2017க்குப் பிறகு அவர் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

