வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாக்கல் செய்த வரிக்குறைப்பு, செலவிடுதல் மசோதா சனிக்கிழமை (ஜூன் 28) அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக அண்மை நாள்களில் செனட் சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ள குடிநுழைவு, எல்லை, வரி குறைப்பு, ராணுவ முன்னுரிமை ஆகியவை தொடர்பான திட்டங்களுக்குத் தேவையான நிதி கிடைக்கும்.
மசோதாவை ஆதரித்து 51 பேர் வாக்களித்தனர்.
49 பேர் அதை எதிர்த்தனர்.
எனவே, அது நூலிழையில் ஏற்கப்பட்டு அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது.
மசோதாவை ஜனநாயகக் கட்சியினரும் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இருவரும் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா, செனட் சபையில் ஏற்கப்பட்டதை மாபெரும் வெற்றி என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.