சிலாசாப், இந்தோனீசியா: இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் மாண்டதுடன் 21 பேரைக் காணவில்லை என்று பேரிடர் அமைப்பின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளனர்.
மத்திய ஜாவாவின் சிலாசாப் மாநிலத்தில் உள்ள மூன்று கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்தன. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மீட்புப் பணியாளர்கள் 23 பேரை உயிருடன் மீட்டனர். இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 21 பேரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன என்றார் தேசியப் பேரிடர் அமைப்பின் பேச்சாளர் திரு அப்துல் முகாரி.
மேடு பள்ளமான பாதை மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாய் அவர் குறிப்பிட்டார். மீட்புப் பணிகளுக்கு உதவ கனமான உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன என்றார் அவர்.
இவ்வாரத் தொடக்கத்தில் கடுமையான வானிலை குறித்து இந்தோனீசிய வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இனிவரும் வாரங்களில் இந்தோனீசியாவின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று அது எச்சரித்தது.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இந்தோனீசியாவில் பருவநிலைக் காலம் நீடிக்கும். அப்போது நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்படுவதோடு நீர் தொடர்பான நோய்களும் அதிகம் பரவும். நவம்பர் தொடக்கத்தில் பாப்புவா வட்டாரத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளங்களாலும் நிலச்சரிவுகளாலும் குறைந்தது 15 பேர் மாண்டனர், 8 பேரைக் காணவில்லை.

