லாஸ் ஏஞ்சலிஸ்: சீனாவுக்காக உளவுபார்த்த சந்தேகத்தின்பேரில் அமெரிக்க கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க நீதித் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
அவ்விருவரும் சீனாவிடம் இரகசியத் தகவல்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. போர்க்கப்பல்களின் பயன்பாட்டுக் கையேடுகள், அவற்றின் ஆயுத விவரங்கள், ரேடார் சாதனத்தின் மூல வரைபடங்கள், பெரிய அளவிலான அமெரிக்க ராணுவப் பயிற்சிக்கான திட்டங்கள் போன்றவை அதில் உள்ளடங்கும்.
“நமது ஜனநாயகத்தைக் கீழறுக்கவும், அதைத் தற்காப்பவர்களுக்கு மிரட்டல் விடுக்கவும் சீன மக்கள் குடியரசு இடைவிடாமல் மேற்கொள்ளும் தீவிர முயற்சிகளை இந்தக் கைது நடவடிக்கை நினைவூட்டுகிறது,” என்று மத்திய புலனாய்வுத் துறையின் உளவுப் பிரிவைச் சேர்ந்த சுசேன் டர்னர் கூறினார்.
சான் டியேகோவில் யுஎஸ்எஸ் எசக்ஸ் கப்பலில் சேவையாற்றிய 22 வயது கடலோடி வெய் ஜின்ச்சாவ், கப்பல்களின் இயக்கங்களையும் செயல்பாடுகளையும் விரிவாகக் காட்டும் பத்திரங்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை விற்றதாக நீதித் துறை தெரிவித்தது.
அந்தத் தகவல்களுக்காக அவருக்குப் பல்லாயிரக்கணக்கான டாலர் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
கைதான இன்னொருவர் 26 வயது அதிகாரி சாவ் வென்ஹெங். இவர் வென்ச்சுரா கவுன்டி கடற்படைத் தளத்திலிருந்து கிட்டத்தட்ட ஈராண்டுகளாக சீனாவுக்காக வேவு பார்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்தோ-பசிபிக்பில் பெரிய அளவில் நடைபெறவிருந்த அமெரிக்க ராணுவப் பயிற்சியின் விவரங்களுக்காக சீன வேவு முகவர் இவருக்கு 15,000 அமெரிக்க டாலர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.