லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், 16 வயது நிரம்பாதோர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று திங்கட்கிழமை (ஜூன் 15) கூறினார்.
அதோடு இணைய விளையாட்டுகள், நேரலைத் தளங்கள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதனையடுத்து, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்ப்பதில் மற்ற நாடுகளைவிட பிரிட்டன் கூடுதல் தீவிரம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு ஸ்டார்மர், திங்கட்கிழமை இத்தடையை உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இளையரைப் பாதுகாக்க நடவடிக்கை
இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பிரிட்டிஷ் இளையரைப் பாதுகாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இளையர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பதோடு வயதில் மூத்த பதின்ம வயதினருக்குத் தடுப்புகள், சேட்பாட் எனப்படும் பேசுசெயலிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் திரு ஸ்டார்மர் விதிப்பார் என்று எதிர்பாார்க்கப்படுகிறது.
தடையை அறிவித்த பிறகு பிரான்சின் இவியான்-லெ-பெய்ன்ஸ் பகுதியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க அவர் புறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது
ஜி-7 கூட்டமைப்பில் சவாலான கேள்விகள்
பிரிட்டனின் தற்காப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்த ஜான் ஹீலி சென்ற வாரம் அப்பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதன் தொடர்பிலும் பிரிட்டனின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்துத் தொடரும் நிலையற்ற சூழல் தொடர்பிலும் ஜி-7 உச்சநிலை மாநாட்டில் திரு ஸ்டார்மர் சிரமமான கேள்விகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை விதிப்பது பிரிட்டிஷ் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், தடை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்ற ஐயமும் மக்களிடையே இருந்துவருகிறது.

