வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதிலடி வரிவிதிப்பு அநேகமாக முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சூசகமாகக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரிகள் இன்னும் உயர்வதை நான் விரும்பவில்லை. ஏனெனில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொருள்களை மக்கள் வாங்க மாட்டார்கள்,” என்றார்.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரிவிதிப்பால் பயனீட்டாளர்களிடையே பொருள்களை வாங்கும் போக்கு குறைந்திருப்பதை திரு டிரம்ப்பின் கருத்துகள் காட்டுகின்றன.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருள்கள்மீது அவர் 10 விழுக்காடு வரி விதித்துள்ளார். மற்ற நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்துவரும் வேளையில், கூடுதல் வரிகளை திரு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
என்றாலும், அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா பதிலடி தந்ததைத் தொடர்ந்து, சீனப் பொருள்கள் மீதான வரிகளை 145 விழுக்காடாக அவர் உயர்த்தினார்.
இந்நிலையில், வரிகளை மேலும் உயர்த்தி தான் பதிலடி தரப்போவதில்லை என சீனா கடந்த வாரம் கூறியிருந்தது.
அமெரிக்காவுடன் சீனா தொடர்பில் இருந்து வருவதாகக் கூறிய திரு டிரம்ப், இந்த விவகாரம் குறித்து உடன்பாடு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தையில் இடம்பெறும் அம்சங்கள், அதில் சீன அதிபர் ஸி ஜின்பிங் நேரடியாக பங்கேற்றது பற்றி திரு டிரம்ப் தெரிவிக்கவில்லை.