ஆஸ்டின், டெக்சஸ்: சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராகத் திரு டோனல்ட் டிரம்ப்பால் ஆறு மாதங்களுக்குமுன் முன்மொழியப்பட்ட டாக்டர் அஞ்சானி சின்ஹாவின் நிலை விரைவில் உறுதிசெய்யப்படக்கூடும்.
செனட் சபை அடுத்த வாரங்களுக்குள் நடத்தும் குழு வாக்கெடுப்பு மூலம் சிங்கப்பூருக்கான தூதராக டாக்டர் சின்ஹா உறுதிசெய்யப்படலாம்.
திரு டிரம்ப் முன்மொழிந்த நூற்றுக்கணக்கான தூதர்களின் நிலையை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சியினர் தாமதப்படுத்துகின்றனர். அதில் டாக்டர் சின்ஹாவும் ஒருவர்.
தூதரகளைத் தேர்வுசெய்வதற்கான நடைமுறையைத் துரிதப்படுத்தும் புதிய உத்தியாக ஒவ்வொரையும் தனித்தனியாக நியமிப்பதற்குப் பதிலாக குழுவாக நியமிக்கும் நடைமுறையைத் திரு டிரம்ப் நிர்வாகம் இந்த வாரம் அறிமுகம் செய்தது.
அதையடுத்து இம்மாத இறுதிக்குள் தேங்கியுள்ள 100க்கும் அதிகமான நியமனங்கள் உறுதிபடுத்தப்படும்.
முதல் தொகுதியில் 48 நியமனங்கள் உறுதிபடுத்தப்படும். அந்தப் பட்டியலில் டாக்டர் சின்ஹாவின் பெயர் இடம்பெறவில்லை.
டாக்டர் சின்ஹாவின் நியமனம் குறித்த விவகாரம் செனட் சபையில் வெளியுறவு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாய் நாடாளுமன்றம் செப்டமர் 9ஆம் தேதி சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
ஜுலை 9ஆம் தேதி டாக்டர் சின்ஹாவுடன் நடைபெற்ற கேள்வி, பதில் அங்கம் காரசாரமாக முடிந்தது. ஜனநாயகக் கட்சியினர் எழுப்பிய ஆட்சேபனை நியமனத்தைத் தாமதப்படுத்தியது.
அப்படிபட்ட சூழலில் கேள்விகளை முன்வைக்கும் குழு கூடுதல் கேள்வி, பதில் அங்கங்களை நடத்துவதுடன் கூடுதல் ஆவணங்களையும் நாடுவர்.
ஆனால், டாக்டர் சின்ஹா மீண்டும் விசாரணைக் குழுவுக்கு முன் வர அவசியமில்லை என்று செனட் சபை தெரிவித்தது.
அது சாதாரண நடைமுறை என்றும் குழு அவரது நியமனத்துக்கு மீண்டும் வாக்களிக்கும் என்றும் அது குறிப்பிட்டது.
இப்போதைக்கு இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்படும் 32 நபர்களின் பெயர் பட்டியலில் டாக்டர் சின்ஹாவின் பெயரும் உண்டு.
அதன் பின் செனட் சபையில் வாக்கெடுப்புக்காக அவர்கள் முன்மொழியப்படுவார்கள்.

