டெஹ்ரான்: ஆறாவது நாளாக வியாழக்கிழமை இரவு தொடர்ந்த அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய உள்கட்டமைப்புகள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
ஈரான்ஷஹர் என்ற விமான நிலையம், துறைமுக நகரான பண்டார் அபாசின் ரயில் நிலையம், தென் ஈரானின் ஹோர்முஸ் நீரிணை அருகில் உள்ள பாலங்கள் போன்ற இலக்குகள் தாக்கப்பட்டதை ஈரானிய அரசாங்க ஊடகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) உறுதிப்படுத்தியது.
விமான நிலையத்தைச் சுற்றி மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் ஒரு ஏவுகணை ஈரான்ஷஹர் விமான நிலையம்மீது விழுந்ததாகவும் ஐஆர்ஐபி (IRIB) ஊடகம் டெலிகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
பண்டார் அபாஸ் ரயில் நிலையத் தாக்குதலில் இரண்டு ஈரானியர்கள் காயமடைந்தனர்.
ஈரானின் ஆகப் பெரிய துறைமுகம் இயங்கும் நகரமான பண்டார் அபாசில் அந்நாட்டுப் புரட்சிக் காவல் படையின் முக்கிய ராணுவத் தளவாடங்கள் அமைந்துள்ளன. துறைமுகமும் தளவாடங்களும் ஹோர்முஸ் நீரிணை அருகில் உள்ளன.
ஹொர்மொஸ்கன் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாலங்கள்மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதோடு, நால்வர் காயமுற்றனர் என்று அச்செய்தி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

