பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம்மீது சனிக்கிழமை (மார்ச் 14) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் ஆதரவுபெற்ற சக்திவாய்ந்த ஒரு குழுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு உறுப்பினர்கள் மாண்டதை அடுத்து அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை நீண்டகாலமாகக் கண்டுவரும் ஈராக் மத்திய கிழக்குப் பூசலிலும் இழுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்ச் 14ஆம் தேதி காலை நேரத்தில் வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கரும்புகை எழுந்தது.
தூதரகம் தாக்கப்பட்டது குறித்து இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர் ஆளில்லா வானூர்தி ஒன்று தூதரகத்தைத் தாக்கியதாகக் குறிப்பிட்டார். மற்றொருவர் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு அமெரிக்கத் தூதரகம் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர் மூண்டதை அடுத்து பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்படுவது இது இரண்டாவது முறை.
தொடர்புடைய செய்திகள்
ஈரானின் ஆதரவுபெற்ற ஆயுதமேந்தியப் பல குழுக்கள், மத்திய கிழக்கு வட்டாரத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது ஆளில்லா வானூர்திகளையும் எறிபடைகளையும் கொண்டு ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்துவதாக இதற்குமுன் கூறியுள்ளன.
அமெரிக்கா அத்தகைய குழுக்களைப் பயங்கரவாதக் குழுக்களாக வகைப்படுத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள அத்தகைய குழுக்கள் தாக்கப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவைமீது பழி சுமத்தப்பட்டுள்ளன.

