வாஷிங்டன்: கடலில் கப்பல்களில் ‘சிக்கி’ விநியோகிக்கப்படாமல் இருக்கும் ஈரானிய கச்சா எண்ணெய்மீதான தடை உத்தரவுகளை அமெரிக்கா விரைவில் விலக்கக்கூடும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
“வரும் நாள்களில் கடலில் ‘சிக்கியிருக்கும்’ ஈரானிய எண்ணெய்மீதான தடை உத்தரவுகளை நாங்கள் விலக்கக்கூடும். அது கிட்டத்தட்ட 140 மில்லியன் பீப்பாய் அளவு எண்ணெய் ஆகும்,” என்று திரு பெசன்ட் வியாழக்கிழமை (மார்ச் 19) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வோர்க் ஒளிவழி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
“அந்த வகையில், கணக்கிடும் முறையைப் பொறுத்து அது 10 நாள்களிலிருந்து இரண்டு வாரங்களுக்குத் தேவையான எண்ணெய் அளவாகும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த ஈரானிய எண்ணெய்யை உலகளவில் பயன்பாட்டுக்குச் சென்றடைந்தால் அது அடுத்த 10லிருந்து 14 நாள்களுக்கு எண்ணெய் விலையைக் குறைவாக வைத்துக்கொள்ள உதவும் என்று திரு பெசன்ட் விவரித்தார்.

